
புதுக்கோட்டை மாவட்டம் செம்பட்டிவிடுதி காவல்நிலையத்தை மாமியார் வீட்டோடு ஒப்பிட்டு டிக் டாக் வீடியோ பதிவிட்டு பரப்பிய இரு இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் செம்பட்டிவிடுதி காவல் நிலைய போலீசார் கடந்த 3ஆம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது வெள்ளாளவிடுதியை சேர்ந்த பாலையா என்ற இளைஞர் முகக் கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதால் அவரது வாகனத்தை பறிமுதல் செய்தனர்.இந்நிலையில் மீண்டும் அவரது வாகனத்தை அவரிடம் ஒப்படைக்க ஜாமீன்தாரர் இருவரை அழைத்து வருமாறு போலீசார் கூறியிருந்தனர்.அதன்படி பாலையா தனது நண்பர்களான நெருஞ்சிபட்டியைச் சேர்ந்த வெற்றிவேல் மற்றும் மகேந்திரனை ஜாமீன் கையெழுத்து இடுவதற்காக காவல் நிலையம் அழைத்து வந்தார்.
இதன்பின் ஜாமீன் கையெழுத்து போட்டுவிட்டு வெளியே வந்த வெற்றிவேல் டிக் டாக் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அந்த காவல்நிலையத்தை மாமியார் வீட்டோடு ஒப்பிடும் வகையில் வசனங்கள் இடம்பெற்று இருந்தது.
அதாவது போகும்போது செய்முறை வாங்க போறததுபோலவே போவாப்ல, ஆனால் வரும்போது சுதந்திர போராட்ட தியாகி போலே வருவாரு என்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தது. இதனையடுத்து
காவல் நிலையத்தை மாமியார் வீட்டோடு ஒப்பிட்டு டிக் டாக் வீடியோ பதிவிட்டு சமூக வலையதளங்களில் தவறாக பரப்பியதாக நெருஞ்சி பட்டியை சேர்ந்த வெற்றிவேலையும்
வீடியோ பதிவு செய்த அவரது நண்பர் மகேந்திரன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

