


புதுக்கோட்டை
புதுக்கோட்டையைச் சேர்ந்த இளைஞரிடம் இராணுவ அதிகாரி போல் நடித்து ஓஎல்எக்ஸ் மூலம் புல்லட் வாகனம் விற்பனை செய்வதாக கூறி ரூ 80 ஆயிரத்து 200 ரூபாயை மோசடி செய்த ராஜஸ்தானை சேர்ந்த முத்து ராகுல் என்ற நபரை சைபர் கிரைம் போலீஸ் உதவியோடு போலீசார் பிடிக்க முயற்சி செய்து வருகின்றனர்.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இதே நபர் ராணுவ அதிகாரி போல் நடித்து புதுக்கோட்டையைச் சேர்ந்த மற்றொருவரிடம் கார் விற்பனை செய்வதாக ரூ.7.50 லட்சம் மோசடி செய்தது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை அருகே உள்ள திருமலைசமுத்திரபுரம் கிராமத்தைச் சேர்ந்த கணேஷ் குமார் என்ற இளைஞரிடம் வாட்ஸ்அப் மூலம் நட்பை ஏற்படுத்திக் கொண்ட ஒரு நபர் தான் ஒரு ராணுவ அதிகாரி என்றும் தன்னிடம் ஒரு புல்லட் விற்பனைக்கு உள்ளதாகவும் அதை ஓஎல்எக்ஸ் மூலம் விற்பனை செய்ய விரும்புவதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பிய இளைஞர் கணேஷ்குமார் அந்த புல்லட்டை வாங்குவதற்காக கூகுள் பே மூலம் ரூ 80 ஆயிரத்து 200 ரூபாயை பண பரிமாற்றம் செய்து உள்ளார்.
அதன் பின்பு சம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொள்ள முடியாததால் அதிர்ச்சி அடைந்த கணேஷ்குமார் இது குறித்து கணேஷ் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இது குறித்து விசாரணை மேற்கொண்ட கணேஷ் நகர் போலீசார் சம்பந்தப்பட்ட நபரின் தொலைபேசி எண்ணை வைத்து சைபர்கிரைம் போலீசாரின் உதவியோடு அவரது முகவரியை கண்டறிந்தனர்.அதில் அந்த நபர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராகுல் முற்று என்பது தெரியவந்தது.சம்பந்தப்பட்ட நபர் ராணுவ அதிகாரி போல் நடித்து இதுபோல் பல இளைஞர்களிடம் ஓஎல்எக்ஸ் மூலம் கார் மற்றும் பைக்குகளை விற்பனை செய்வதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதும் தெரியவந்தது.
இதனையடுத்து அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள கணேஷ் நகர் போலீசார் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இதே நபர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ராணுவ அதிகாரி போல் நடித்து புதுக்கோட்டை பெரியார் நகரைச் சேர்ந்த ஒரு நபரிடம் கார் விற்பனை செய்வதாக ரூ 7.50 லட்சம் மோசடி செய்திருந்தது அப்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.அது சம்பந்தமான வழக்கும் புதுக்கோட்டை நகர காவல்நிலையத்தில் இன்னும் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராகுல் முத்து என்ற சம்பந்தப்பட்ட நபர் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் ராணுவ அதிகாரி போல் நடித்து வாட்ஸ்அப் மூலம் ஆசை வார்த்தைகள் கூறி பலரிடம் பல லட்ச ரூபாய் மோசடி செய்துள்ள போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட நபரின் புகைப்படம் மற்றும் முகவரியை ஆதாரமாகக் கொண்டு அடுத்த கட்டமாக எவ்வாறு அவரை கைது செய்யலாம் என்ற முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.