
மணப்பாறை அருகே வாரிசு சான்றிதழ் வழங்க சிவாஜி கணேசன் என்பவரிடம் 15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய இருவர் கைது

வாரிசு சான்று வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம்.
வருவாய் ஆய்வாளர் மற்றும் வருவாய் உதவியாளர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த தவளைவீரம்பட்டியை சேர்ந்தவர் சிவாஜிகணேசன் . விவசாயி. இவர் தந்தை பெயரில் உள்ள சொத்துக்களை விற்க வாரிசு சான்று தேவைப்பட்டுள்ளது.
இதற்காக வி.பெரியப்பட்டி வருவாய் ஆய்வாளர் ஜோதிமணி அலுவலகத்தில், வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளார். அப்போது சிவாஜி கணேசனிடம் பேசிய வருவாய் ஆய்வாளர் ஜோதிமணியும், வருவாய் உதவியாளர் ராஜேஸ்வரியும் வாரிசு சான்றிதழ் வழங்குவதற்கு ரூ.15ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனர்.
அதற்கு சிவாஜி கணேசன் மறுப்பு தெரிவித்தார். பின்னர் பணத்தை தருவதாக பேசி முடிவு செய்யப்பட்டது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சிவாஜிகணேசன் இதுகுறித்து திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.
அதன்பேரில் ரசாயனப் பொடி தடவிய ரூபாய் நோட்டுக்களை, சிவாஜி கணேசனிடம் போலீஸார் கொடுத்து அனுப்பியுள்ளனர். அந்த பணத்தை வருவாய் ஆய்வாளர் ஜோதிமணியிடமும்,வருவாய் உதவியாளர் ராஜேஸ்வரியிடமும் மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து கொடுத்துள்ளார்.
அப்போது அங்கு மறைந்து நின்ற திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் கருப்பையா (பொறுப்பு) ஆய்வாளர் சக்திவேல் உள்பட 10 பேர் லஞ்ச பணத்தை வாங்கிய ஜோதிமணியையும், வருவாய் உதவியாளர் ராஜேஸ்வரியையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் ஆவணங்களை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்பு போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லஞ்ச ஒழிப்பு போலீஸார் அலுவலகத்திற்கு உள்ளே வந்ததை கண்ட தாசில்தார் தமிழ்கனி, அவரது அறைக்குள் வருவதற்குள் வேகமாக வெளியே வந்து அலுவலக உதவியாளரின் பைக்கில் அமர்ந்து சென்று விட்டார். பின்னர் அரை நேரத்திற்கு பின்பு மீண்டும் அலுவலகத்திற்கு வந்தார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.