
அரியலூர் மாவட்டம் சுந்தரேசபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 90)
இவருக்கு இரண்டு மனைவிகள் சிவபாக்கியம் முதல்மனைவி, பஞ்சவர்ணம் 2 வது மனைவியாவார். மூத்த தாரம் சிவபாக்கியத்திற்கு ,தனவேல், தர்மராஜ் மற்றும் தனலட்சுமி என 3 பிள்ளைகள் உள்ளனர். இரண்டாவது மனைவி பஞ்சவர்ணதிற்கு தங்கமணி(48) என்ற மகனும் உள்ளார். அதில் முதல் மனைவி சிவபாக்கியம் மற்றும் மூத்த மகன் தனவேல் முன்பே இறந்துவிட்டனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை அவரது வீட்டில் இரண்டாவது மனனவியான பஞ்சவர்ணம் எழுந்து வந்து பார்க்கையில் சாமிநாதன் கழுத்து மற்றும் வாயில் வெட்டுபட்டு பிணமாக கிடந்துள்ளார்.
இது குறித்து விக்கிரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சாமிநாதன் தனது சொத்தை இரண்டாம் தாரத்தின் மகனான தங்கமணிக்கு எழுதி வைத்ததால் முதல் தாரத்தின் பிள்ளைகள் இருவரும் ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளதாகவும் இதனால் சில நாட்களுக்கு முன் சாமிநாதன் தனது சொத்த மூன்றாக பிரிக்க முடிவு செய்து ஊர்பஞ்சாயத்தில் தெரிவித்திருந்த சூழ்நிலையில் தற்போது கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இதனையடுத்து விக்கிரமங்கலம் போலீசார் மூத்த தாரத்தின் 2 வது மகன் தர்மராஜ் அவரது மகன் குஞ்சிதபாதம் மற்றும் இரண்டாம் தாரத்தின் மகன் தங்கமணி ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
சொத்து தகராறு காரணமாக தந்தையை இருதாரத்தின் மகன்களில் யாராவது ஒருவர் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.