
சென்னை: சென்னை பாடி மேம்பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சென்ற போக்குவரத்து காவலரின் கழுத்தை மாஞ்சா நூல் அறுத்ததில், காயமடைந்தார். இந்தச் சம்பவத்தைடுத்து வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் ரஜீஸ்பாபு, இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாஞ்சா நூல் மூலம் காற்றாடிகளை பறக்க விட சென்னையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தடையை மீறி பலர் மாஞ்சா நூல் மூலம் காற்றாடிகளை பறக்க விடுகிறார்கள்.. சென்னை போலீஸார் கண்டுக்கொள்ளாமல் இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் போக்குவரத்து பிரிவில் காவலராக பணியாற்றுபவர் ஜெயகுமார் (42), இவருடைய மனைவி மகேஷ்வரி (38). இவர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் காவலராகப் பணிபுரிந்து வருகிறார். இருவரும் உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு கொரட்டூரில் இருந்து வீடு திரும்பி கொண்டிருந்தனர். சென்னை பாடி மேம்பாலத்தில் பைக்கில் வந்த போது ஜெயகுமார், கழுத்தில் மாஞ்சா நூல் சிக்கி அறுத்தது. இதனால் கணவன், மனைவி இருவரும்விபத்தில் சிக்கினார்கள். அவர்கள் இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது இருவரும் நலமாக உள்ளனர். மருத்துவமனையிலிருந்து இது தொடர்பாக தகவல் அறிந்து மாஞ்சா நூல் மூலம் காற்றாடிகளை பறக்க விட்டது, தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தச் சூழலில் வில்லிவாக்கம் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ரஜீஸ்பாபுவை இடமாற்றம் செய்து கூடுதல் கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார்.சென்னை வில்லிவாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மாஞ்சா நூலைப் பயன்படுத்தி காற்றாடிகள் அதிக அளவில் பறக்க விடுவதாகப் புகார்கள் எழுந்ததால் இன்ஸ்பெக்டர் ரஜீஸ்பாபு காவல் கட்டுபாட்டு அறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.