
தூத்துக்குடி மாவட்டம் :06.08.2020
நேற்று (05.08.2020) மாலை கோவில்பட்டி சாஸ்திரி நகரில் கோவில்பட்டி பாரதி நகர் மேட்டுத்தெரு கருமாரியம்மன் கோவில்தெருவைச் சேர்ந்த மாடசாமி மகன் கோடீஸ்வரன் (வயது 29) என்பவரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர்.
தகவலறிந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோடீஸ்வரன் தந்தை மாடசாமி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, இறந்த கோடீஸ்வரன் உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுப்படி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கலைக்கதிரவன் மேற்பார்வையில் கோவில்பட்டி மேற்கு காவல் ஆய்வாளர் திரு. அய்யப்பன் தலைமையில், உதவி ஆய்வாளர்கள் திரு. அரிக்கண்ணன், திரு. ஸ்டீபன், சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. நாராயணசாமி, தலைமை காவலர்கள் திரு. முருகன், மற்றொரு முருகன், திரு. ஆனந்த அமல்ராஜ், திரு. ரமேஷ், ஸ்டீபன் இளையராஜா, காவலர்கள் முகமது மைதீன், மற்றும் ஸ்ரீராம் ஆகியோர் அடங்கிய தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி தனிப்படையினர், கோவில்பட்டி சிந்தாமணி நகரைச் சேர்ந்த ராமசாமி மகன் ராமகிருஷ்ணன் (வயது 27), கோவில்பட்டி சாஸ்திரி நகரைச் சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் முத்துக்காளை (வயது 24) மற்றும் கோவில்பட்டி சிந்தாமணி நகரைச் சேர்ந்த காசிப்பாண்டி மகன் பாலுக்குட்டி (வயது 26) ஆகியோரை கைது செய்துள்ளனர். கைது செய்தவர்களை விசாரணை செய்தததில், இறந்த கோடீஸ்வரனை, அவர்கள் முன் விரோதத்தில கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இறந்த கோடீஸ்வரனுக்கும், கைது செய்யப்பட்ட எதிரிகளுக்கும் பல குற்றவியல் வழக்குகளில் சம்மந்தபட்டுள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்படி எதிரிகளை விரைந்து 12 மணி நேரத்தில் கைது செய்த காவல்துறை தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்.