
தாம்பரம், ஆக 9 :

பள்ளிக்கரணை, ஜெயச்சந்திரன் நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (72).
இவர், அவரது மகள் வீட்டில் தங்கியிருந்த நிலையில் கடந்த மாதம் 29ம் தேதி மாலை நடைப் பயிற்சிக்கு செல்வதாக கூறி வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார்.
பின்னர் அவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது மருமகன் சந்திரசேகர் சம்பவம் குறித்து பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த பள்ளிக்கரணை காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கடந்த 1ம் தேதி தாம்பரம் – முடிச்சூர் சாலையில் உள்ள பழைய தாம்பரம் குளத்தில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக இருந்த அடையாளம் தெரியாத முதியவர் உடலை கைப்பற்றிய தாம்பரம் காவல் நிலைய போலீசார் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து சமூகம் தொடர்பாக விசாரித்து வந்த நிலையில், குளத்தில் சடலமாக இருந்த நபர் பள்ளிக்கரணையில் காணாமல் போன சீனிவாசன் என தெரியவந்தது.
பள்ளிக்கரணையில் காணாமல் போனவர் எப்படி தாம்பரம் குளத்தில் சடலமாக கிடந்தார் ? அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் தொடர்ந்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
