
கோவை ஆர்எஸ் புரம் அருகே உள்ள சீரநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். கூலித்தொழிலாளியான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் சுந்தர்ராஜன் சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்று திருமணம் செய்தார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஆர்எஸ் புரம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கடத்தி சென்ற இளைஞரை தேடி வந்தனர்.
ஐந்து மாதங்களாக தனிப்படை போலிஸார் தொடர்ந்து தேடிவந்தனர். இதனை தொடர்ந்து தனிப்படைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் திண்டுக்கல் சென்ற போலிஸ் சுந்தர்ராஜனை கைது செய்ததுடன் சிறுமியை மீட்டனர். இதனை தொடர்ந்து போலிஸார் சுந்தரராஜன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.