Home தமிழ்நாடு மயிலாடுதுறை அருகே பொறையாறில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை; கணவர் கைது வீட்டுக்கு தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு!

மயிலாடுதுறை அருகே பொறையாறில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை; கணவர் கைது வீட்டுக்கு தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு!

0
மயிலாடுதுறை அருகே பொறையாறில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை; கணவர் கைது வீட்டுக்கு தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு!

மயிலாடுதுறை அருகே பொறையாறு நல்ல தண்ணீர் சந்து தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது39). இவர் தரங்கம்பாடியில் மருந்து கடை நடத்தி வருகிறார். இவருக்கும் திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகள் காயத்ரி (28) என்பவருக்கும் கடந்த 13.4.2014 அன்று திருமணம் நடந்தது. இவர்களுக்கு சரண்(5), கமலேஷ்வரன்(3) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

திருமணம் ஆனதில் இருந்து தம்பதியினருக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் வேல்முருகனுக்கு, வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், அதன் காரணமாக தன்னை வேல்முருகன் அடிக்கடி கொடுமைப்படுத்துவதாகவும் காயத்ரி தனது பெற்றோரிடம் கூறி வந்தார்.

இதன் காரணமாக தம்பதிக்குள் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்த நிலையில் காயத்ரி கோபித்துக்கொண்டு குடவாலில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு குடவாசலில் உள்ள மாமனார் செல்வராஜின் வீட்டுக்கு சென்ற வேல்முருகன், காயத்ரியை சமாதானம் செய்து பொறையாறில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காயத்ரி தனது வீட்டின் அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்த பொறையாறு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காயத்ரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காயத்ரியின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவருடைய தந்தை செல்வராஜ் பொறையாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். காயத்ரிக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் மயிலாடுதுறை உதவி கலெக்டர் மகாராணி, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார். இதனிடையே பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் தற்கொலை வழக்குப்பதிவு செய்து மனைவி காயத்ரியை தற்கொலைக்கு தூண்டியதாக வேல்முருகனை கைது செய்து உள்ளனர்.

காயத்ரியின் மரணத்தால் ஆத்திரம் அடைந்த அவருடைய உறவினர்கள் சிலர் வேல்முருகன் வீட்டின் அருகே வசித்து வரும் அவருடைய தாயார் ராஜலட்சுமியின் கூரை வீட்டுக்கு நேற்று முன்தினம் இரவு தீ வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொறையாறு தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

இதில் வீட்டில் இருந்த கட்டில், பீரோ உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக ராஜலட்சுமி அளித்த புகாரின் பேரில் பொறையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மயிலாடுதுறை செய்தியாளர்,
சுபாஷ்சந்திரபோஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here