
காவல் ஆய்வாளரின் இடமாற்றத்தை ரத்து செய்யக்கோரி திருப்பரங்குன்றம் பொதுமக்களும் வியாபாரிகளும் போஸ்டர் ஒட்டி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மதுரை திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராகப் பணிபுரிகிறார் மதனகலா. இவர் கொரோனா காலத்தில் மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியும், ஊரடங்கு காலத்தில் திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் உணவில்லாமல் தவித்த குரங்குகளுக்கு உணவளித்து வந்தார். அக்கறையுடன் செயல்பட்டு பொதுமக்களின் பிரச்னைகளைத் தீர்த்து வந்தார்… இதனாலேயே பொதுமக்களுக்கு ஆய்வாளர் மதனகலாமேல் தனிப்பிரியம் ஏற்பட்டது.
இந்த நிலையில், ஆய்வாளர் மதனகலா தேனி மாவட்டம், போடிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. இதைக் கேள்விப்பட்ட திருப்பரங்குன்றம் பொதுமக்கள், ஆய்வாளர் மதனகலாவின் இடமாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
“திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் ஆய்வாளர் பணியமர்த்தப்பட்டதிலிருந்து சட்டம் ஒழுங்கை மனிதாபிமானத்தோடு காத்து வந்தார். அவரது இடமாற்றத்தை ரத்து செய்ய வேண்டும்” என திருப்பரங்குன்றம், காவல்நிலையம், மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் போஸ்டர் அடித்து மாநகர காவல்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்