
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் ஆட்டோ ஓட்டுனரை மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த வழக்கில் SDPI கட்சி நிர்வாகி உள்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வந்தவாசி அடுத்த கோட்டைக்குள் தெருவைச் சேர்ந்தவர் நசீர் கான். இவர் SDPI கட்சி ஆட்டோ சங்கத்தில் ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ சங்கத் தலைவர் மஸ்தானுக்கும், முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 7ஆம் தேதி இரவு நசீர் கான் வேலையை முடித்துக் கொண்டு மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அவர்களை வழிமறித்த மர்ம கும்பல் நசீர்கானை சரமாரியாக வெட்டிப்படுகொலை செய்துவிட்டு தப்பிச்சென்றது.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலிசார், SDPI கட்சி ஆட்டோ சங்க நிர்வாகியான மஸ்தான் உள்பட 7 பேரை கைது செய்துள்ளனர்