மதரீதியாக பொய்யான தகவல்கள் பரப்பியதாக தமிழகம் முழுவதும் 356 பேர் மீது வழக்கு…
கொரோனாத் தொற்று பரவல் தொடர்பாக மதரீதியாக பொய் தகவல்களை பரப்பியதாக தமிழகம் முழுவதும் 356 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக மத ரீதியான பொய் தகவல்களை இணையதளங்களில் வெளியிடுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிடகோரி உமர் பாரூக் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் தமிழக டி.ஜி.பி. சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “கொரோனா வைரஸ் தொற்றுடன் மதத்தை சம்பந்தப்படுத்தி சமூக வலைதளங்களில் பொய் தகவல் வெளியிட்டதாக, சென்னையில் 8 பேர் மீது 8 வழக்குகளும், மதுரையில் 167 பேர் மீது 19 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. ஆனால் இவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுபோல தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், 356 பேர் மீது 159 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 86 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பதில் மனுவுக்கு பதிலளிக்கும்படி மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, விசாரணையை ஜூலை 13ம் தேதிக்கு தள்ளிவைத்தது.
